இந்த நாட்டின் மக்கள் எப்படியெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான தீபிகா நாராயண் பர்த்வாஜ் பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக தனது வினாவினை எழுப்பியுள்ளார்.
டெல்லியில் மாணவர்களும், இளைஞர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவர்கள் மீது டெல்லி போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு பல்வேறு மட்டத்திலும் எதிப்புகள் நிலவியதைத் தொடர்ந்து இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எதையும்விட முக்கியம்! பேப்பர் லீக் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை உறுதி செய்ய, ஃபாஸ்ட்-டிராக் நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அக்கறையுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நமது தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் எனவும் தெர்வித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்த முயற்சிப்பவர்களை ஒருபோதும் விடமாட்டோம் எனவும் உறுதி அளித்துள்ளார்.
ஆனால் பிரதமர் மோடியின் இந்தக் கருத்துகளுக்கும் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் பத்திரிகையாளரும், ஆவணப் பட இயக்குநருமான தீபிகா நாராயண் பர்த்வாஜ் தனது கருத்துகளை எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இளைஞர்களின் நலனைவிட வேறு எதுவும் முக்கியம் இல்லை என்றால், நீங்கள் இவ்வளவு தாமதமாகப் பேசியிருக்க மாட்டீர்கள் மோடி ஜி.அதுவும் நாடு இப்போது கொதிக்கத் தொடங்கியதால் தான் இது நடந்தபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் உயிரிழந்தபோதே நீங்கள் விஷயத்தை நகர்த்தியிருக்க வேண்டும். நிர்பயா வழக்கின்போதும் ஃபாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் நமது பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொல்லப்படுகிறார்கள். எங்கும் நீதி இல்லை.
வெற்றி பெறும் மாநிலங்களை விட்டு சற்று விலகி, இந்த நாட்டின் மக்கள் எப்படி உயிரை இழக்கிறார்கள் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் உங்களுக்கும், நாட்டுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியலைத் தாண்டி, குறைந்தபட்சம் இப்போதாவது சரியான காரியத்தைச் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.
