தேசிய ஜனநாயக கூட்டணி முழு வடிவம் பெறும் நாளாக ஜனவரி 28 ஆம் தேதி அமையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் கட்சிகள் சேருவதிலேயே நீண்ட இழுபறி இருந்து வருகிறது. அதனை சற்றே தணிக்கும் வகையில் அன்புமணி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமகவை கூட்டணியில் இணைத்த நிகழ்வு அமைந்திருக்கிறது. அடுத்து தேமுதிகவின் நிலை என்ன என்பது இன்று தெரிந்து விடும்.

கடந்த ஆண்டிலிருந்து அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படும் ‘அதிமுக – தவெக கூட்டணி’ என்பது பின்பு ‘என்.டி.ஏவில் விஜய்’ என மாற்றம் அடைந்திருந்திருந்தாலும், ”கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வந்துவிடுவார்கள்” என்ற பேச்சு தற்போதைய ‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தால் மீண்டும் அழுத்தமாக பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஒரு தெளிவான பார்வை இன்று வெளியாகும் தீர்ப்பின் அடிப்படையில் சற்றே தெரிந்து விடும். ஒருவேளை இதை விடும் பட்சத்தில், கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐயிடம் விஜய் விசாரணையை எதிர்கொண்ட பின்பு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக, நயினார் மீதான அதிருப்தியில் கூட்டணியை விட்டு வெளியேறிய டி.டி.வி தினகரனை மீண்டும் உள்ளே இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. விஜய்யை மற்றொரு வாய்ப்பாக பார்த்த தினகரனுக்கு தற்போது விஜய் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களால் அவநம்பிக்கை ஏற்பட்டு மீண்டும் என்.டி.ஏவுக்கே திரும்புவார் என சொல்லப்படுகிறது. அதன்படியே, டெல்லி சென்றுள்ள டி.டி.வி தினகரன் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்தித்து தன்னை என்.டி.ஏவில் இணைத்து கொள்வார் என்ற தகவல்கள் வருகின்றன.

மற்றொரு புறம் ராமதாஸையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வெளியும் நடந்து வருவதாக தைலாபுர தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன தான் ஒரு சாரார் சொல்வது போல பாமக அன்புமணி கையில் இருந்தாலும், ராமதாஸ் அவர்களின் மன வருத்தத்தால் பாமக தொண்டர்களின் வாக்குகள் முழுமையாக அன்புமணி தரப்பினருக்கும் அதன் மூலமாக அதிமுக கூட்டணிக்கும் கிடைக்குமா? என்பது ஒரு முக்கிய கேள்வி. அதனை சரிசெய்ய வேண்டுமெனில் ராமதாஸும் கூட்டணிக்குள் இருக்க வேண்டும். அதனை மையப்படுத்தியே ஒரு டீம் ராமதாஸை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு அந்த டீம் முன்வைக்கும் வலுவான காரணம் திமுக கூட்டணியில் இருக்கும் சிக்கல்கள். ஆக, அதுவும் ஒருபுறம் நிறைவேறும் பட்சத்தில் கூட்டணி வலுப்படும் என நம்புகிறது என்.டி.ஏ தலைமைகள்.

மேற்கூறிய அத்தனை முயற்சிகளுக்குமான டார்கெட் நாளாக குறிக்கப்பட்டிருப்பது தான் ஜனவரி 28. அன்று தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கன்னியாகுமரியில் நடக்கும் தாமரை மகளிர் மாநாடு நிகழ்வில் ஒட்டுமொத்த கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக கூட்டணியை முழுமையாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக குழுவினர் 5 பேர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். அச்சந்திப்பில் மேற்கூறிய கூட்டணி கட்டமைப்பு பணிகள் பற்றி கலந்துரையாடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

என்ன நடக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version