விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் APR என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது, ஆலையில் தேங்கியிருந்த பட்டாசு கழிவுகளைச் சேகரித்து எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாகப் பட்டாசு கழிவுகள் திடீரென வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த கருப்பசாமி என்ற பட்டாசு தொழிலாளி தீப்பொறி பட்டு நிலைகுலைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதில் அவர் படுகாயமடைந்தார்.
ஆலையில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு, உடனடியாகச் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 100% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
