சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புத்துறையினரால் நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தின் தரைத்தளத்தில், இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பெயிண்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தரைத்தளம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது.
இந்த விபத்து நடந்த நேரத்தில் தானும் அலுவலக ஊழியர்களும் தலைமையகத்தில் இருந்ததாகவும், அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சி செய்தும் இயலாததால், தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
தரைத்தளம் வழியாகக் கீழே இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், நெல்லை முபாரக்கும், தலைமையக ஊழியர்களும் பாதுகாப்பாக கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.
இதனைத் தொடந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரும் கட்சி நிர்வாகிகளும் இணைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கட்டிடத்தின் தரைத்தளம் முற்றிலும் எரிந்து விட்ட நிலையில், தீயணைப்புத் துறையினரின் விரைவான மீட்பு நடவடிக்கையினால் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் எந்தவிதக் காயமுமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
