சுதந்திரத்திற்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவும் நிலைகுலைந்த நாள் இன்று. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பின் பல அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் இன்றைய நாள் ஒரு கருப்பு தினமாகவே பார்க்கப்படுகிறது.
ரேபரேலி தொகுதியில் 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடந்ததாவும், இந்த வெற்றி செல்லாது எனக் கூறி அவரை எதிர்த்து போட்டியிட்ட சோஷிலிஸ்ட் கட்சியின் ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 1975-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூண்டேறி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திரா காந்தி மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை முடிவும் வரை இந்திரா காந்தி பிரதமர் பதவி வகிக்கலாம், ஆனால் அவர் எந்த தீர்மானத்தின் மீதும் வாக்களிக்க முடியாது என நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்தார்.
சூழல் தனக்குச் சாதகமாக இல்லை என்பதை அறிந்த இந்திரா காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 352, 356 பிரிவுகளின்கீழ் அவசரநிலை வரைவைத் தயார்செய்து ஜனாதிபதி ஃபக்ருதீன் அலியிடம் கையொப்பம் பெற்றார். இந்திய வானொலியின் வாயிலாக அவசரநிலையை 1975, ஜூன் 26-ம் தேதி காலை 6 மணிக்குப் பிரகடனம் செய்தார். இந்தியாவின் பாதுகாப்புக்கு உள்நாட்டுக் குழப்பங்களால் ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுக்க முடியாது, நிச்சயம் பதவி விலக நேரிடும் என்பதை அவர் மனம் ஏற்க மறுத்தது. இவற்றையெல்லாம் தவிர்க்கவும், இந்த எல்லாப் போராட்டங்களையும் ஒட்டுமொத்தமாக ஒடுக்கவும், அதிகார மமதையில், `அவசரநிலை’ என்கிற பெரும் ஆயுதத்தைக் கையிலெடுத்தார் இந்திராகாந்தி. இந்தியாவிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 675 பேர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள்.
மிசா (MISA – Maintenance of Internal Security Act – 1972) மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (DISIR – Defence of India Act and Defence of India Rules, 1962) ஆகிய இரு சட்டங்கள் தீவிரமாகக் களத்தை ஒடுக்கப் பயன்பட்டன. மிசாவின் கீழ் 34,988 பேரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 75,818 பேரும் கைதுசெய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்., ஜமாத்-ஏ-இஸ்லாமி உள்ளிட்ட பல அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. இந்தியாவின் பெரு நகரங்களில் மின்சாரத்தைத் துண்டித்து இருளில் மூழ்கச் செய்தார்கள்.
பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு `1977, ஜனவரி 18 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படும்’ என அறிவிப்பு வெளிவந்தபோதுதான், மக்களின் முகங்களில் புதிய நம்பிக்கையின் ஒளி தென்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் இந்திரா காந்தி ஊர் ஊராகச் சென்று மன்னிப்புக் கோரினார். தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் தோல்வியடைந்தார்கள். ஜனதா கட்சி, ஒன்றிய அரசை அமைத்தது. புதிய அரசு, தனது முதல் உத்தரவாக அவசரகாலத்தை ரத்துசெய்தது. ஒருவழியாக அவசரநிலை, 1977 மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
ஆண்டுகள் உருண்டோடினாலும் கூட 51 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இந்திய அரசியல் வரலாற்றில் இந்திரா காந்தியின் பிரதமர் காலமும், எமெர்ஜென்சி காலமும் என்றென்றும் அழியா சுவடுகளாக இருக்கும்.
