சென்னை புரசைவாக்கம் தொகுதியில் 2006-ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ வாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வடசென்னை திமுக மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர், பின்னர் 2011-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகினார்.
2011 தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இணைந்த அவருக்கு, வடசென்னை வடக்கு ( மேற்கு ) மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் இவர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வி.எஸ்.பாபு தற்போது விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ளார்.
மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தன்னை விடுவித்ததில் அதிருப்தியாக இருந்தவர், விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் பனையூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை; எனக்கு அங்கு ஒத்துழைப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஏற்கனவே செங்கோட்டையன், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது வி.எஸ்.பாபுவும் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
