அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளருமான பெஞ்சமின், திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் கடந்த 1988ஆம் ஆண்டு இணைந்த பெஞ்சமின், 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி உள்ளார். சென்னை 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு, மாநகராட்சி துணை மேயராகவும் இருந்துள்ளார். ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டங்களை முன்னின்று நடத்துவதில் தீவிர அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்த பெஞ்சமினுக்கு கடந்த 2016-இல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். அதில் வெற்றி பெற்ற பெஞ்சமின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்
கடந்த 2021 மற்றும் 2026 தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டும் ஜெஞ்சமினால் வெற்றி பெற முடியவில்லை. தற்போதைய தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் இரண்டு அணிகளாகப் பிரிந்து மீண்டும் இணைந்துள்ளனர். இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலரது மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்தார். அதில் பெஞ்சமினின் பதவியும் பறிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று கண்ணீர் விட்டார்.
தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனப் பேட்டியும் தட்டினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பெஞ்சமின் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.என்.பி. வெங்கட்ராமன் மே மாதம் 28ஆம் தேதி திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கஜேந்திரனும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது பெஞ்சமினும் இணைந்துள்ளார். இதேபோல், அதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் குழந்தை வேலு திமுகவில் இணைந்துள்ளார்.
ஒருபுறம் அதிமுகவில் இருந்து ஆளும்கட்சியான தவெகவுக்கு படையெடுகும் நிலையில், ஒரு சிலர் திமுகவுக்கும் ஜாகை மாற்றி வருகிறார்கள்.
மொத்தத்தில் அதிமுக என்பது வரும் காலங்களில் கரைந்து காணாமல் போய்விடுமா என்னும் கேள்விதான் தமிழ்நாடு அரசியல் அரங்கில் மேலோங்கி நிற்கிறது.
