பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள மட நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி 4 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்துரை (60), திண்டுக்கல் மாவட்டம், பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65), விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் (56), மற்றும் பழனி அருகே டி.கே.என். புதூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர்.
இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு, பழனி அடிவாரம் சாலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் தொடர்பான சர்ச்சையிலிருந்து உருவானது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகியோருக்கு நிலத்தை விற்பனை செய்ததாகவும், இதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நிலப்பதிவு தொடர்பான தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், பதிவுத்துறையின் மாவட்ட பதிவாளர் சசிகலா மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர்.
விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது முருகதாஸ், வெள்ளைத்துரை, அன்வர்தீன் மற்றும் சேதுபதி ஆகிய 4 பேரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், நில மோசடியில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
