சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்தது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தரப்பினர் 25 எம்எல்ஏ-க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. நான்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவுக்குப் பிறகு, தற்போது அதிமுக ஒன்றிணைந்துள்ளது.

நேற்று (மே 26) அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் இரு பிரிவினரும் ஒன்றாக இணைவது தான் அதிமுகவிற்கு நல்லது என்பதை உணர்ந்து, தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி விங், அதிமுகவின் எஃகு கோட்டையை இனி யாராலும் பிரிக்க முடியாது என பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நெஞ்சில் ஏந்தி, கழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது.

கோடான கோடி உண்மைத் தொண்டர்களின் உதிரத்தாலும், தியாகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்த எஃகு கோட்டையை இனி எவராலும், எந்தச் சூழலிலும் அசைத்துப் பார்க்க முடியாது. நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, “இனி நமக்குள் பிரிவில்லை” என்ற ஒற்றை முழக்கத்தோடு ஓரணியில் திரண்டு நிற்போம். இந்த எஃகு கோட்டையைத் தகர்க்க இனி எதிரிகளுக்கு வழியே இல்லை என்பதை நம் ஒற்றுமையால் நிரூபிப்போம்.

நம் கண்முன்னே இருக்கும் ஒரே இலக்கு… புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் நம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் ‘இரட்டை இலை’ கொடியை கம்பீரமாகப் பறக்க விடுவது மட்டுமே! மக்கள் நலனுக்கான இந்த தர்ம யுத்தத்தில் களம் கண்டு, தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சியை மலரச் செய்வோம் என்று பதிவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version