கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சூலூர் பகுதியில் சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் காவல் துறை அதிகாரிகள் முழுமையாக உணர வேண்டும். சாதாரணப் பிரிவோடு நிறுத்திவிடாமல், இத்தகைய மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஐ.ஜி ஆகிய உயர்மட்ட அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.”
குற்றங்களை நிரூபிப்பதற்கான மருத்துவப் பரிசோதனைகளை விரைவாகச் செய்து முடிப்பது இத்தகைய வழக்குகளில் மிக முக்கியமானது. எனவே, சென்னையில் இருப்பது போன்ற அதிநவீன மருத்துவப் பரிசோதனைக்கான டி.என்.ஏ ஆய்வகம் ஒன்றை மேற்கு மண்டல மக்களின் நலன் கருதி கோவையிலும் அமைப்பதற்குத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
ஏற்கனவே கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையின் தீவிர விசாரணையால் வெறும் 4 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டது. அதேபோன்ற ஒரு அசுர வேக செயல்பாட்டை இந்த வழக்கிலும் காவல்துறை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு ஏதுவாக, முதற்கட்ட விசாரணையை எவ்வித தொய்வும் இன்றி மிக விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.
