தமிழகத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணையம் வாயிலாக OP சீட்டு பெறும் சேவையை மேலும் எளிமைப்படுத்த அரசு மருத்துவமனைகள் பணிகள் மேற்கொண்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளில் (OP) தினசரி அதிக அளவிலான நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று டாக்டர் சீட்டு பெறும் சிரமம் நீடித்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நவீன தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சமீபத்தில் தெரிவித்தபடி, மொபைல் செயலி மூலம் எளிதாக ஓபி சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்த சுகாதாரத் துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ABHA (Ayushman Bharat Health Account) செயலி மூலம் தமிழக அரசின் HIMS (Health Information Management System) உடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் ஓபி சீட்டு முறை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், இந்த முக்கியமான வசதி குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதைச் சரிசெய்யும் வகையில், சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் மற்றும் QR கோடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக HIMS இணைப்புக்கு சென்று ஓபி சீட்டு பெற முடியும்.மக்கள் மூன்று எளிய வழிகளில் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்: ஆயுஷ்மான் பாரத் ABHA செயலி வழியாக, இணையதளம் மூலம் நேரடியாக, மருத்துவமனையில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து.

இந்த முறை அமல்படுத்தப்பட்டதன் மூலம் நோயாளிகள் வீட்டிலிருந்தே அல்லது மருத்துவமனைக்கு வரும் முன்பே சீட்டு பெற்று, நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் உடையவர்கள் மற்றும் நீண்ட தூரத்திலிருந்து வருபவர்களுக்கு இது பெரும் பயனளிக்கும். தமிழக அரசும் தனது சொந்த மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய செயலி HIMS உடன் முழுமையாக இணைக்கப்பட்டு, மேலும் எளிமையான இடைமுகத்துடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டுமானால், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, சுகாதார சேவையை மேம்படுத்தும் இந்த டிஜிட்டல் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version