முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் தவெக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ( 06.02.2026 ) தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 10,000 மனுக்கள் தீர்ந்துவிட்டதாக கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
பொதுவெளியில் விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஆக்கி வருகிறது. இதற்கு தவெக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், ”வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம், ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதலமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள்.
அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை, இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அடுத்து சேலத்தில் 13-ம் தேதி விஜய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். அனுமதி கடிதம் கொடுத்து இருக்கிறோம். தற்போது அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள். திமுக, பாஜகவுக்கு என்ன உறவு இருக்கிறதோ? தெரியவில்லை” எனக் கூறினார்.
