மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன் என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆளுநர் பேசுகையில், “நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாததே மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவேன். தேவைப்பட்டால், முதலமைச்சரிடம் நேரடியாகப் பேசி தீர்வு காண்பேன். ஆளுநர் மாளிகைக்கும் அரசுக்கும் எதிர்பார்ப்பு இருந்தால், மக்கள் தங்கள் தேவைகளை உடனடியாகத் தெரிவிக்கலாம். ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் அர்லேகர், தேசபக்தி பற்றிய புதிய கோணத்தை முன்வைத்திருந்தார். “துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு போருக்குச் செல்வது மட்டும் தேசபக்தி அல்ல. நதிகளை மீட்டெடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியில் நதி இருக்கிறது, ஆனால் தண்ணீர் எங்கே? இளைஞர்கள் முன்வர வேண்டும். யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாகக் களமிறங்கும்” என்று அழுத்தமாகக் கூறியிருந்தார்.
அதே பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களையும் ஆளுநர் ஆய்வு செய்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. “ஆளுநர் எதற்காக நலத்திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆளுநரின் இந்த செயல்பாடுகள் அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநரின் பங்கு மற்றும் எல்லைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். மக்கள் பிரச்சினைகளை நேரடியாக ஆளுநரிடம் தெரிவிக்கலாம் என்ற புதிய அணுகுமுறை, நிர்வாகத்தில் இரு முனைகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், ஆளுநர் அர்லேகரின் நடவடிக்கைகள் தமிழக அரசியலில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.
