மிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மறைந்த பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜின் திரைப்பங்களிப்பையும் நினைவுகளையும் போற்றும் வகையில், ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட விழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழா தொடர்பாக அண்ணா சாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், லிங்குசாமி, பி. வாசு, ஏ.எல். விஜய், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து விழா நடைபெறும் என்றார். பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் சொந்த ஊர்களான தேனி மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் மணிமண்டபம் அமைப்பதற்கான தொடக்க முயற்சியாக இந்த விழா அமையும் என்றும், இருவருக்கும் வெண்கலச் சிலைகள் அமைக்கும் திட்டமும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

விழாவில் கே. பாக்யராஜ் எழுதிய நூலை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொள்ளவுள்ளார். மேலும், எழுத்தாளர் அஜய் பாலா எழுதிய பாரதிராஜா குறித்த நூலும் வெளியிடப்படுகிறது. இரு இயக்குநர்களின் திரைப்பயணத்தை பிரதிபலிக்கும் புகைப்படக் கண்காட்சி மற்றும் 10 நிமிட ஆவணக் காணொளியையும் இயக்குநர் ஏ.எல். விஜய் உருவாக்கி வெளியிடவுள்ளார்.

திரைப்படக் கல்லூரி மற்றும் விஸ்காம் மாணவர்களுக்காக ‘மாஸ்டர் கிளாஸ்’ எனும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார். மேலும், சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக விழாவில் பங்கேற்கலாம் என்றும், அரங்கிற்கு வெளியே பெரிய திரைகள் அமைத்து நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி (FEPSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன. இயக்குநர் பார்த்திபன் படைப்பாற்றல் தலைவராக (Creative Head) செயல்பட, லிங்குசாமி, ஏ.எல். விஜய், சரண் மற்றும் தீனா ஆகியோர் விழா வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version