கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சேவா டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கோவில் கும்பாபிஷேகம், பிரம்மோற்சவம் உள்ளிட்ட மத விழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கலாம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழாக்களில் பங்கேற்கும் யானைகளின் உடல்நிலை மற்றும் தகுதி குறித்து அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும், யானைகளுக்கு குறைந்தது 8 மணி நேரம் ஓய்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாரர் யோசனை முன்வைத்துள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
