தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முன்னாள் அமைச்சரும் விராலிமலை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க கடந்த ஜூலை 10-ஆம் தேதி தடை விதித்தது. அந்தத் தடை தற்போது ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சரும் விராலிமலை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம். விஜயபாஸ்கர் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

சி. விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், அந்தத் தொகுதியில் இரண்டாவது இடம் பிடித்த தவெக வேட்பாளர் முருகேசன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றும், மூன்றாவது இடம் பிடித்த திமுக வேட்பாளர் செல்லபாண்டியன்தான் தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், இடைத்தேர்தல் நடத்த அனுமதித்தாலும் எந்தவித சட்டச் சிக்கலும் ஏற்படாது எனவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

எம். விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், கரூர் தொகுதியில் 80 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தனது தேர்தல் செல்லாது என கருதப்பட்டாலும், வேறு எந்த வேட்பாளரையும் நேரடியாக வெற்றியாளராக அறிவிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணமாகக் காட்டி, தொகுதி மக்களுக்கு மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை நீடிக்கக் கூடாது என்பதால், இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த இரு மனுக்களும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version