வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் தன்னாட்சி பிரதேசமான சியூட்டா (Ceuta) எல்லைக்குள் மொராக்கோவிலிருந்து சுமார் 60 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் நுழைந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் கார்டியா சிவில் (Guardia Civil) மற்றும் கடல்சார் மீட்புப் படை வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூறு ஆய்வு (Autopsy) மேற்கொள்ளப்பட உள்ளது.

எல்லையை கடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பலர் நீந்தியே சியூட்டாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்ற பெருமளவிலான எல்லை மீறல் சம்பவம் கடந்த 2021-ஆம் ஆண்டிலும் நடந்தது.

மொராக்கோவை ஸ்பெயினிலிருந்து பிரிக்கும் ஜிப்ரால்டர் நீரிணை வழியாக நடைபெற்ற இந்த பெருமளவிலான நுழைவுக்குப் பிறகு, இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டும் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எல்லை நிலைமை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என கூறப்படுகிறது.

சியூட்டாவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், சுமார் 80 ஆயிரம் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சியூட்டா பிராந்தியத் தலைவர் ஜுவான் ஜீசஸ் விவாஸ், இந்த விவகாரத்தில் ஸ்பெயின் அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக விமர்சித்துள்ளார். எனினும், ஸ்பெயின் அரசு, மொராக்கோவுடனான இருதரப்பு உறவு தொடர்ந்து சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “சியூட்டாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை உடனடியாக சமாளிக்க அரசு முழுமையாக செயல்பட்டு வருகிறது. தேவையான அனைத்து வளங்களும் திரட்டப்பட்டுள்ளன. மொராக்கோ மற்றும் சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று சமூக வலைதளமான X-ல் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், மொராக்கோ எல்லையை ஒட்டியுள்ள ஸ்பெயினின் மற்றொரு தன்னாட்சி பிரதேசமான மெலில்லா (Melilla) பகுதிக்கும், வியாழக்கிழமை மட்டும் 300 முதல் 400 பேர் வரை நிலம் மற்றும் கடல் வழியாக நுழைய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version