பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
ஐரோப்பா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமான வெப்ப அலை பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வெப்பத்தால் மக்கள் விரைவில் நீரிழப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கை மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு முனைந்துள்ளது. மேலும், 845 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்றபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸில் மட்டும் நான்கு சிறுவர்கள் உட்பட பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஐரோப்பா முழுவதும் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முதியோர் மற்றும் வீடற்றவர்களின் பாதுகாப்புக்காக மீட்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அவசர ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த அதீத வெப்பத்திற்கு பருவநிலை மாற்றத்தை முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. வரும் நாட்களில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றன. மக்கள் நீரை அதிகம் அருந்தவும், நேரடி வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
