தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வரும் 4ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
