காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கிளாஸ்கோ ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் கேரளத்தை சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இறுதிப்போட்டியின் தொடக்கத்திலேயே ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார். 4-வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெய்ல் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். போட்டி நடத்திய ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கென்சி 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மற்றொரு இளம் வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தூரம் தாண்டி 5-வது இடத்தைப் பிடித்தார்.

27 வயதான முரளி ஸ்ரீசங்கர், கடந்த 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளிலும் 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். காயம் காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன நிலையில், மீண்டும் களத்திற்குத் திரும்பித் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version