2025-ஆம் ஆண்டிற்கான உயரிய ’60-ஆவது ஞானபீட விருது’ பெற்ற கவிஞர் வைரமுத்துவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அமித்ஷா அனுப்பி உள்ள கடிதத்தில், ”இந்த உயரிய விருது, தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமான அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்குக் கிடைத்த தகுந்த, நடுநிலையான அங்கீகாரமாகும். தங்களுக்கு ஞானபீட விருது வழங்கி கௌரவிப்பது, தங்களின் இணையற்ற இலக்கியத் திறமைக்கான தேசிய அளவிலான பாராட்டாக மட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் செழுமையான பாரம்பரியத்தைப் பெருமையுடன் போற்றும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகவும் திகழ்கிறது.
தமிழ் இலக்கியத்தின் சிறந்த கவிஞர், பாடலாசிரியர் மற்றும் அறிஞரான தங்களின் பங்களிப்பு, இந்திய இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் ஆழமாகச் செழுமைப்படுத்தியுள்ளது. தங்களின் படைப்புகள் மனித உணர்வுகள், இயற்கை, காதல், சமூக விழிப்புணர்வு மற்றும் இந்தியத் தத்துவங்களின் அற்புதமான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. தங்களின் எழுத்துக்களின் வாயிலாகத் தமிழ் மொழிக்குத் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய பெருமையைச் சேர்த்துள்ளதோடு, இலக்கியம் மற்றும் இசை மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் தொட்டுள்ளீர்கள்.
எதிர்காலத்திலும் உங்கள் படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வை, புதிய விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலை வழங்குவதோடு, வருங்காலத் தலைமுறைகள் தங்களது தாய்மொழிகளுடனும் இலக்கியத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்கமளிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது. இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை முன்னிட்டு, எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதோடு, தங்களின் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் தொடர்ச்சியான படைப்பாற்றல்மிக்க வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
