சென்னையில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு குதிரை கிளாண்டர்ஸ் தொற்றுநோயால் இறந்ததைத் தொடர்ந்து, சுமார் 200க்கும் மேற்பட்ட குதிரைகளின் மாதிரிகள் மற்றும் குதிரை பராமரிப்பாளர்களின் மாதிரிகள் ஹரியானாவில் உள்ள ICAR–National Research Centre on Equines (NRCE) ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் கோவளம்–மகாபலிபுரம் கடற்கரை பகுதிகளில் சவாரிக்காக 200க்கும் மேற்பட்ட குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்குதிரைகள் பெரும்பாலும் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் மற்றும் சிவானந்த சாலை MRTS நிலையம் அருகிலுள்ள தற்காலிக இடங்களில் பராமரிக்கப்படுகின்றன, பல இடங்களில் குதிரைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
குதிரைகளை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பதால், உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அவற்றை சரியாக பராமரிக்க முடியாத நிலை உள்ளது. மாநில அரசு விதிகளின்படி குதிரைகளுக்கு உரிமம், பதிவு, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி சான்றிதழ் மற்றும் தடுப்பூசி பதிவுகள் கட்டாயமாக இருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முன்பு சென்னையில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அதன் உரிமையாளர் பெசன்ட் மெமோரியல் கால்நடை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குதிரையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் குதிரையின் உடலில் பல்வேறு இடங்களில் புண்கள், வீங்கிய கட்டிகள், கடுமையான சதை சுருக்கம் போன்றவற்றைக் கண்டறிந்தனர்.
பின்னர் மாதிரிகளை சேகரித்து ஐசிஏஆர் (ICAR) என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் அந்த குதிரையை ‘கிளாண்டர்ஸ்’ நோய் தாக்கியிருப்பது உறுதியானது. இதையடுத்து, ஐசிஏஆர் ஆய்வகத்தின் சார்பில் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத்துறைக்கு அவசர அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
அதில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் உடனடியாகத் தனிமைப்படுத்த வேண்டும், அந்த குதிரைகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அந்த வகையில் சென்னையில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு குதிரை கிளாண்டர்ஸ் தொற்றுநோயால் இறந்ததைத் தொடர்ந்து, சுமார் 200க்கும் மேற்பட்ட குதிரைகளின் மாதிரிகள் மற்றும் குதிரை பராமரிப்பாளர்களின் மாதிரிகள் ஹரியானாவில் உள்ள ICAR–National Research Centre on Equines (NRCE) ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
