கல்லூரி மாணவியை திருமணம் செய்த திமுக நிர்வாகி ஒருவர், திமுக பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக அம்மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திரைப்பட பாணியில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த10-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் பிறந்தநாள் விழா அரக்கோணத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரவியை, நட்டநடு சாலையில் சந்தித்த மாணவி, தனக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்பெண் கொடுத்த மனுவில், ”அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2 மாதம் திருமண வாழ்வு சுமூகமாக சென்றுக் கொண்டிருக்க, திடீரென தெய்வசாயல், தன்னை திமுக பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தினமும் தன்னை கடுமையாக தாக்கினார்”.
”மன உளைச்சலில் இருந்த நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என்னை காப்பாற்றிய உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தனர். ஆனால் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்ல முயற்சி செய்ததோடு, தன்னுடன் வரவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்து விடுவேன்” என மிரட்டினார்.
அவரது மிரட்டலுக்கு அஞ்சி அவருடன் சென்ற போது, மீண்டும் மீண்டும் தன்னை கொடுமை செய்ததால், நிரந்தரமாக தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். அத்தோடு எனது கல்லூரி படிப்பையும் தொடர்ந்து வருகிறேன். ஆனால் தெய்வசாயல், தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும், புகார் அளிக்க சென்றால் இது எங்கள் எல்லை இல்லை என அரக்கோணம் காவல்துறையினர் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அரக்கோணம் தாலுகா காவல்நிலையம், ராணிப்பேட்டை மாவட்ட காண்காணிப்பாளர் அலுவகலத்திலும் புகார் அளித்தேன். அங்கும் எனது புகாரை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தினமும் தன்னை கடித்தும், அடித்தும் ஏற்படுத்திய காயங்களை எம்.எல்.ஏவிடம் காட்டி அழுதுள்ளார் அப்பெண். இதனையடுத்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தெய்வசாயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.