இந்தியத் தொலைக்காட்சிகளில் இல்லாத வகையில் முதன்முறையாக தனியார் நடத்தியிருக்கும் தமிழ் தனி இசைக்குரல் தேர்வு நிகழ்ச்சி இணைய வாசிகளை மட்டுமின்றி இசையை ரசிக்கும் தமிழ் நெஞ்சங்களையும் உற்சாகத் துள்ளலிட வைத்திருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஜீ தமிழின், சரிகமபதநி, சன் தொலைக்காட்சியின் சன் சிங்கர், கலைஞர் தொலைக்காட்சியின குரல் அரசன் என பல்வேறு தொலைக்காட்சிகளும் இதுபோன்ற குரல் தேர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அதனை ஒளிபரப்பு செய்து தங்கள் பார்வையாளர்களை பெருக்கி வருகின்றன.
அதிலும் சீசனுக்கேற்ப பக்திபாடல்கள், காதல் பாடல்கள், பழைய பாடல்கள் என நடத்தி மக்களின் வைபை அதிகரித்து வருகிறார்கள்.

ஆனாலும் இத்தகைய பாடகர்கள் தேர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சினிமா பாடல்கள் மட்டுமே பிரதானமாகப் பாடப்படுகின்றன. ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானப் பாடல்களை மீண்டும் பாடச் செய்யப்பட்டு அதனைப் பாடுபவரை சிறந்த குரல்தேர்வாகத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதோடு, அவர்களின் வறுமையான பின்புலம், மனதைப் பாதிக்கச் செய்த நிகழ்வுகள் என பலவற்றையும் படம்பிடித்துக் காட்டி தங்கள் நிகழ்ச்சிக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதும் உண்டு.
இப்படி வெவ்வேறு தொலைக்காட்சிகளில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் அது சினிமாப் பாடல்கள் என்னும் வட்டத்துக்குள் மட்டுமே அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்முறையாக இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்து புதிய சூழலாக தமிழ் தனி இசைக் கலைஞர்களின் திறமைகளை அங்கீரித்துள்ளது ஐ-பாப்ஸ்டார் தமிழ் என்னும் நிகழ்ச்சி.
திறமையுள்ள சுயாதீன தமிழ் தனி இசைக் கலைஞர்களுக்கான வாய்ப்பு வழங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல் வட்டத்துக்குள் இல்லாமல் நமக்குத் தோன்றியதை செய்திருக்கிறார்கள் தமிழ் தனி இசைப் பாடகர்கள்.
சென்னையில் நடந்தேறியுள்ள ஐ-பாப்ஸ்டார் தமிழ் (I-POPSTAR Tamil) நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஜூலை 23, 2026 அன்று வெளியாகியிருக்கிறது.
முழுக்க முழுக்க சுயாதீனமான மற்றும் சொந்த இசையை (Indie Music & Original Voices) ஊக்குவிக்கும் ஒரு மேடைப் போட்டியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் சூப்பர் மெண்டராக யுவன் சங்கர் ராஜாவும், மெண்டராக அசல் கோலார், அந்தோனி தாசன், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் எபிசோடு நிகழ்ச்சியில் நடைபெற்ற குரல் தேர்வில் பங்கேற்றவர்கள் தாங்களே எழுதி இசையமைத்தப் பாடல்களைப் பாடியிருப்பது பார்ப்போரையும், கேட்போரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.
தங்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்காதா ஏன் எங்கிக் கொண்டிருப்போருக்கு ஒரு மேடை போட்டு கொடுத்துள்ளது ஐ-பாப்ஸ்டார் தமிழ்!
