ந்தியப் பாதுகாப்புத் துறை வரலாற்றில் ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாட்களாக மாறியுள்ளன. இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘அயர்ன் டோம்’ (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பைப் போல, இந்தியா தனக்கான பிரத்யேகப் பாதுகாப்பு அரணை உருவாக்குவதில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

உலக நாடுகளின் பாதுகாப்பில் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பாலிஸ்டிக் ஏவுகணைகள்தான். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணைகள் சில நிமிடங்களில் இலக்கை தாக்கும் திறன் கொண்டவை. அவற்றை நடுவானிலேயே தடுத்து அழிப்பதற்கான தொழில்நுட்பம் மிகவும் சில நாடுகளிடமே உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டுமே இதுவரை இந்தத் திறனை முழுமையாகப் பெற்றிருந்தன. தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் உறுதியாக இணைந்துள்ளது.

இன்டர்செப்டர் ஏவுகணைகள் – வானின் காவல் அரண்

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) மேம்பட்ட இரண்டு ‘இன்டர்செப்டர்’ (Interceptor) ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டன. இன்டர்செப்டர் ஏவுகணை என்பது வான்வெளியில் நின்று காவல் காக்கும் ஒரு போர்வீரனைப் போன்றது. எதிரி நாட்டு ஏவுகணை நம்மை நோக்கி வருவதை உணர்ந்த அடுத்த நொடி, அதை வான்வழியிலேயே துரத்திச் சென்று, மக்கள் வசிக்கும் நகரங்கள் அல்லது ராணுவ முகாம்கள் மீது விழுவதற்குள் நடுவானில் அழிப்பதே இதன் முக்கியப் பணியாகும். இந்தச் சோதனையின் போது, இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றை லாக் (Lock) செய்து, இன்டர்செப்டர் ஏவுகணைகள் கச்சிதமாக அழித்தன. 2,000 கிலோமீட்டர் முதல் 5,000 கிலோமீட்டர் தூரப் பரப்பைக் கொண்ட, நீண்ட தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மிக முக்கிய விசேஷம் என்னவென்றால், இவை இரண்டு அடுக்குகளில் செயல்படுகின்றன:

எண்டோ-அட்மாஸ்பியரிக் (Endo-atmospheric)

கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலப் பகுதிக்குள் வரும் இலக்குகளை அழிப்பது.

எக்சோ-அட்மாஸ்பியரிக் (Exo-atmospheric)
வளிமண்டலத்திற்கு வெளியே, விண்வெளிக்கு அருகிலுள்ள 100 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்தில் வரும் இலக்குகளைத் தாக்குவது.

இதன் மூலம் எதிரி ஏவுகணை விண்வெளியில் மிக உயரத்தில் இருந்தாலும் சரி, அல்லது வளிமண்டலத்திற்குள் அதிவேகமாக நுழைந்தாலும் சரி, இரண்டையும் வெவ்வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் பல அடுக்கு பாதுகாப்புத் திறனை இந்தியா பெற்றுள்ளது.

NASM-MR – கடற்பரப்பின் புதிய வேட்டையாடி

மூன்றாவது சோதனை முற்றிலும் பதிய ஆயுதமான ‘Naval Anti-Ship Missile–Medium Range’ (NASM-MR) எனப்படும் நடுத்தர தூரக் கடற்படை எதிர்ப்பு ஏவுகணையாகும். இந்தியாவால்  முதன்முறையாக இந்த ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இது நாட்டின் பாதுகாப்பு சோதனையில் ஒரு மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது. கடலில் வெகுதொலைவில் இருக்கும் எதிரிக் கப்பல்களை வேட்டையாடுவதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை மூன்று முக்கியத் திறமைகளை நிரூபித்துள்ளது. முதலாவதாக, இலக்கை நோக்கி மிகத் துல்லியமாகப் பயணித்தது. இரண்டாவதாக, எதிரி நாட்டு ரேடார்களின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிப்பதற்காக, கடல் அலைகளுக்கு மிக நெருக்கமாக, மிகக் குறைந்த உயரத்தில் (Sea-skimming) பறந்து சென்றது. மூன்றாவதாக, கடல் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. சப்சோனிக் (Subsonic) வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் வல்லமை கொண்டது. இதனைப் போர்க்கப்பல்களில் இருந்தும், மிக்-29கே (MiG-29K) போன்ற போர் விமானங்களில் இருந்தும் ஏவ முடியும் .

மல்டி லேயர் பாதுகாப்பு (Multi-layered BMD) என்றால் என்ன?

இதனை மூன்று முக்கியப் பகுதிகள் கொண்ட ஒரு பாதுகாப்புப் குடையாக உருவகப்படுத்தலாம். ரேடார்கள் எதிரி ஏவுகணை ஏவப்பட்ட உடனே அதைக் கண்டறியும் கட்டுப்பாட்டு மையங்கள் எப்போது, எப்படிப் பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கும். இன்டர்செப்டர் ஏவுகணைகள் உடனே பாய்ந்து சென்று ஆபத்தை நடுவானில் அழிக்கும். இதில் ஒரு அடுக்கு (Layer) தவறினாலும், அடுத்த அடுக்கு ஏவுகணையைத் தடுத்து நிறுத்திவிடும்.

உலக அரங்கில் இந்தியாவின் தனித்துவமும் தற்சார்பும்

இத்தகைய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை (BMD) அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் நேட்டோ (NATO) போன்ற ஒரு சில வல்லரசு நாடுகளும் ராணுவக் கூட்டமைப்புகளும் மட்டுமே இதுவரை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றன. தற்போது இந்தச் சோதனைகளின் மூலம், இந்தியா அந்தப் புகழ்பெற்ற ‘எலைட் கிளப்பில்’ (Elite Club) அதிகாரப்பூர்வமாகத் தடம் பதித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, இந்த ஒட்டுமொத்த தொழில்நுட்பமும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (Atmanirbhar Bharat) எனப்படும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது சொந்த டி.ஆர்.டி.ஓ (DRDO) விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமிதமான விஷயமாகும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியா இனி தனது வான் மற்றும் கடல் எல்லைப் பாதுகாப்பிற்காகப் பிற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. விண்வெளி முதல் ஆழ்கடல் அலைகள் வரை, தனக்கான பிரத்யேகப் பாதுகாப்பு கவசத்தை இந்தியா அமைதியாக, ஆனால் மிக வலிமையாகக் கட்டமைத்துள்ளது.

இந்த மூன்று ஏவுகணைச் சோதனைகளும் வெறும் ராக்கெட் ஏவுதல்கள் மட்டும் அல்ல; இந்தியாவின் பாதுகாப்பு முன்னெப்போதையும் விட புத்திசாலித்தனமாகவும், வலிமையாகவும், தற்சார்புடனும் மாறிவிட்டது என்பதை உலகுக்கு பெருமிதத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தியாவை அவ்வப்போது சீண்டும் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவும் கருதப்பட வேண்டும் என்கிறார்கள் நாட்டின் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

– பா. முகிலன்

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version