ஈரான்-இஸ்ரேல் மோதல் கடந்த ஐந்து மாதங்களாக உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர், இடையில் சிறிது காலம் இடைவெளி விட்டு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஒருநாள் அமெரிக்காவும் ஈரானும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துவிட்டு, அடுத்த நாளே பெரிய அளவிலான தாக்குதல்களில் ஈடுபடுவது போன்ற முரண்பாடான நிகழ்வுகள் தொடர்கின்றன. இதனால் போரின் போக்கு பலருக்கும் புரியாத புதிராகவே நீடித்து வருகிறது.
இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விநியோகம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டவை குறித்து கோடிக்கணக்கான மக்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர். இத்தகைய சூழலில், போர் தொடர்பான ரகசியத் தகவல்களை முன்கூட்டியே பயன்படுத்தி சிலர் பங்குச் சந்தையில் பெரும் லாபம் ஈட்டுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்நிலையில், முதன்முறையாக ஈரான் தரப்பில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு ஈரான் ரகசிய தூதரக வழியாக அனுப்பிய அறிக்கையில், போர் தகவல்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை விவரங்களைப் பயன்படுத்தி Market Manipulation மற்றும் Insider Trading மூலம் பெரும் லாபம் ஈட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் கூற்றுப்படி, அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின்போது, ஜூன் 17 அன்று எட்டப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை நிரந்தரமாக்கும் முயற்சிகளை இவர்கள் சீர்குலைப்பதாகவும், அதே நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி நிதிச் சந்தையில் செயற்கையான ஏற்ற இறக்கங்களை உருவாக்கி லாபம் பார்ப்பதில் குறியாக இருப்பதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை காலத்திலும் ஈரான் இதே குற்றச்சாட்டை டிரம்புக்கு நேரடியாகத் தெரிவித்ததாகவும், அவர் நடவடிக்கை எடுக்காததால் துணை அதிபரை நாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் தரப்பில் இருந்து கூறப்படும் படி, இத்தகைய சந்தை கையாடல்கள் மூலம் சுமார் 9 பில்லியன் டாலர் லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மோதல்கள், கப்பல் போக்குவரத்துத் தடைகள் ஆகியவை கச்சா எண்ணெய் விலையிலும் பங்குச் சந்தையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதை இந்தக் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், அமெரிக்க வெள்ளை மாளிகை இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது. “ஈரானிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. Insider Trading போன்ற எந்தச் செயலும் நடைபெறவில்லை” என அது தெரிவித்துள்ளது. டிரம்பின் பங்கு பரிவர்த்தனைகள் தனி நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரம் ஏற்கெனவே பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தை கையாடல் குற்றச்சாட்டுகள் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
