சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை 5 அல்லது 6-ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துவது நல்லது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வாய்மொழி அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையின்போது, மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா, “மூன்றாவது மொழி என்றால் அது இந்தி மட்டுமல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஆனால் 9-ஆம் வகுப்பில் புதிய மொழியை கட்டாயமாக அறிமுகப்படுத்துவது சரியல்ல. அந்த வகுப்பில் மாணவர்கள் ஏற்கனவே பொதுத்தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். புதிய மொழியை 5 அல்லது 6-ஆம் வகுப்பிலேயே கற்பிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார். இந்த நீதிமன்றத்தின் கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் அறிவுறுத்தினார்.
மேலும், “மத்திய அரசின் திட்டம் என்பதற்காகவே அதை நிராகரிக்கக் கூடாது. மாநிலத்தின் கல்வி முறை தொடரலாம்; அதே நேரத்தில் மத்திய அரசு பள்ளிகளைத் தடுக்கக் கூடாது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கையே மாநிலத்தின் எதிர்ப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பை கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், புதிய அரசு பதவியேற்றுள்ளதால், நவோதயா பள்ளிகள் தொடர்பாக அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க 3 வார அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
