அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட “நல்ல வாய்ப்புகள் இருப்பதாக” அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 13 நாட்களாக ஈரானின் ஹார்முஸ் நீரிணை முற்றுகை விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளன. இந்த அமைதி சூழலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிச்சிகனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தனக்கு மிகுந்த பொறுமை உண்டு என்றும் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், நாங்கள் மீண்டும் பழையபடி செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தார்.
மேலும், ஈரான் தரப்பு தங்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர்களைத் கடுமையாகத் தாக்கியதே ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததற்குக் காரணம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரின் இந்த கருத்துகளை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறுகையில், அமெரிக்காவுடன் நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றார். பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்படலாம், ஆனால் நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றார்.
