பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரானிய வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா–ஈரான் இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பிராந்திய ஒத்துழைப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தியக் குடியரசின் மதிப்பிற்குரிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே, புனித ஈத் அல்-அத்ஹா பண்டிகையை முன்னிட்டு தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை பெற்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் உருவான நமது இரு நாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு, இரு அரசுகளின் முயற்சியால் மேலும் வலுப்பெற்று விரிவடையும் என்று நம்புகிறேன். இந்திய அரசும், இந்திய மக்களும் தொடர்ந்து வளமும் வெற்றியும் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேரடியாக அனுப்பிய முதல் அதிகாரப்பூர்வ தகவல் இதுவாக கருதப்படுகிறது.
அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு பிறகு, புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இதுவரை பொதுமக்கள் முன் தோன்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கு மற்றும் அடக்க நிகழ்வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார்.
86 வயதான அலி கமேனி, பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்று வரும் உயர்மட்ட தூதரக தொடர்புகளில் இந்த வாழ்த்து பரிமாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
