தமிழ்நாடு 10 இலட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாக  முதலமைச்சர் விஜய் கூறியதற்கு மக்களை திசை திருப்பாதீர்கள் என முன்னாள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  நடிகர் விஜய்க்கு  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்பதாக  தெரிவித்துள்ளார்.

அதே நேரம், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம் எனக் கூறியுள்ளார்.

‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு என விஜய் குற்றம்சாட்டியதைக் குறிப்பிட்டு, அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருப்பதாகவும்,  தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக சொல்லிவிட்டதாகவும், அது உங்களுக்குத் தெரியாதா? எனவும் வினா எழுப்பியுள்ளார்.

இதற்குப் பின்னரும் பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்துவிட்டு,  உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க எனக் கூறியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,  வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள் என  தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version