தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் பதவியேற்பது நாளையா அல்லது நாளை மறுநாளா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 108 ல்இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஆட்சி அமைக்க கூடுதலான இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
பிற்பகலில் சென்னை வரும் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநரை சந்தித்த பிறகு தேதி இறுதிச் செய்யப்படும் என தகவல் கூறப்படுகிறது..
இதனிடையே தவெக நிருவாகியும் எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்று பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை சந்தித்து பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஆலோசனை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை செயலாளர் உடனும் ஏற்கனவே செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் விஜய்யின் நீலங்கரை வீட்டுக்கு ஜோதிடர் ரதன் பண்டிட் வருகை தந்துள்ளார். பதவி ஏற்க நல்ல நேரம் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் பதவி ஏற்பு நாளையா, நாளை மறுநாளா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
