தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு நாளை மறுநாள் (ஜூலை 23-ல்) வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் திருவிழாக்கோலம் காணப்படவுள்ளது. இந்த படம் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் ‘ஜனநாயகன்’ படம் மற்றும் முதல்வரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சிறப்பு T-Shirts-களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களில் மட்டுமே இதுபோன்ற ஆடைகள் தயாரிக்கப்படும் நிலையில், தற்போது 70-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் விதவிதமான டிசைன்களில் டீ-ஷர்ட்டுகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர் மன்றங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் வெளியாகும் தினத்தைத் தாண்டி அடுத்த ஒரு வாரத்திற்கும் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருப்பூர் ஜவுளித் துறையில் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர் சக்திவேல் கூறுகையில் தங்கள் நிறுவனத்தில் மட்டும் ஜனநாயகன் டி-ஷர்ட் 25, 000க்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளதாகவும் படம் வெளியான அடுத்த ஒரு வாரத்திற்கு டி-ஷர்ட் விற்பனை இருக்கும் என்பதால் மேலும் ஆர்டர்கள் வருவதாகவும் தெரிவித்தார். ஜனநாயகன் ஸ்டில் மற்றும் அவரின் படங்கள் அனைத்தும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரிண்ட் மற்றும் சீப் மினிஸ்டர் விஜய், தளபதி என விதவிதமான படங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.
