முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். விஜய்யுடன் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், நடிப்பில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநராகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
சந்தீப் கிஷன் நடிப்பில் ‘சிக்மா’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். ஜூலை 31-ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலபல காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது. செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், முதன்முதலாக தற்போது ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அப்பா குறித்தும், அவரது சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
இந்த நேர்காணலில் சுவாரஸ்யமாக கேட்கப்பட்ட கேள்வி : “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்து விட்டு தம்பி வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று கூப்பிட்டால், இந்தியாவிலிருந்து எந்த ஒரு சிறந்த நடிகரை கூட்டி செல்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா (விஜய்) தான். இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பதில் அளித்தார்.
அத்தோடு சென்னையில் ஐபிஎல் நடந்த சமயங்களில் விஜய்யின் தோளில் சிறுவனாக அமர்ந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்த சில அனுபவங்களையும் ஜேசன் சஞ்சய் பெருமையோடு பகிர்ந்த வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகிறது.
