தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்‘ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேவிஎன் (KVN) புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான கே. வெங்கட நாராயணா, தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்‘ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். தணிக்கை பிரச்சனை தொடர்பாக ‘ஜனநாயகன்‘ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணாவுக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும், அதிகாரமும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தெரிவிப்பது, மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து முறைப்படி பெற்றுத் தருவதுமே சிறப்பு பிரதிநிதியின் முதன்மையான பணியாகும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற போதும், ஆட்சி அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை இடங்களை பெறவில்லை. இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோருமாறு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க விஜய் சென்ற போது, வெங்கட நாராயணா உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
