விமர்சனங்களை கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சாது எனவும், காமராஜர் வழியில் செயல்பட்டார்கள் என பெயரை பெறுவதும்தான் தங்களது லட்சியம் என காங்கிரஸ் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர்  சென்னை கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம், அண்ணல் காந்தி நினைவிடம், ராஜாஜி நினைவிடம் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் நினைவிடம் உள்ளிட்ட நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்கள்.

அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்..

பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எங்கள் இருவரையும் நம்பி, தமிழ்நாடு முதலமைச்சருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவியை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.. இதற்கு ராகுல் காந்திக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

59 வருடங்களாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அமைச்சர் பதவி வழங்கியிருப்பது மகிழ்ச்சி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நானே காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் பார்த்தது கிடையாது.

இத்தனை ஆண்டுகளாக பாடுபட்ட காங்கிரஸ் என் கட்சித் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என கனவு இருந்தது, இந்தநிலையில் இனி நாங்கள் காமராஜர் வழியில் ஆட்சி செய்வோம்.

மக்கள் பணியை செய்ய நாங்கள் வந்துள்ளோம். நேற்று பதவி ஏற்ற நிலையில் இன்று அனைவருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

திமுக தொடர்ந்து உங்கள் மீது கடுமையான விமர்சனம் வைத்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு,  காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை கண்டு அஞ்சாது, ஆங்கிலேயர் துப்பாக்கிக்கே அஞ்சாதவர்கள் நாங்கள். சுகந்திரம் வாங்கி கொடுத்த கட்சி எங்களுக்கு விமர்சனம் கண்டு பயம் கிடையாது எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வர இந்திராகாந்தி கடுமையாகப் போராடினார். அதற்குப் பின்னால் ராஜீவ் காந்தி அடுத்ததாக சோனியா காந்தி தலைமையிலும் தொடர்ந்து போராடினோம்.

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப்பெரிய கனவு. அந்தக் கனவை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு கூட்டணியை அமைத்து இரண்டு அமைச்சரவை பெற்றுள்ளார் அவர்தான் இந்தியாவினுடைய கதாநாயகனாக இருக்கின்றார்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு மேலிட பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் பதவி இருந்து உள்ளார்கள் ஆனால் தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அவர்களுடைய தலைமையில் தான் இந்த கூட்டணி மந்திரி சபை என்பது உருவாக்கப்பட்டது..

ஜனநாயக மாற்று அரசியலைக் கொண்டு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார்..

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தவர்களுக்கெல்லாம் எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிரூபித்து காட்டி உள்ளார் எனக் கூறினார்.

தமிழக மக்கள் காங்கிரசின் இந்த இரண்டு அமைச்சர்களும் நேர்மையாக செயல்படுகிறார்கள் லஞ்சம் ஊழல் இல்லாமல் செயல்படுகிறார்கள் காமராஜர் ஆட்சி வழிநடத்தினார்கள் என்ற பெயரை பெறுவது தான் எங்களுடைய லட்சியம் எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version