தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் பலவீனமான தென்மேற்கு பருவமழை சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றாலும், உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
வேலூர், கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் மதுரை உள்ளிட்ட சுமார் 19 உள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக பொதுமக்கள் கடுமையான அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39° முதல் 40° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° முதல் 30° செல்சியஸ் வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
