அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்துவது தொடர்பான கோரிக்கையை எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த தேர்வில் இரண்டாவது தாளில் தமிழ், ஆங்கிலம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பாடங்களுக்கு தலா 30 மதிப்பெண்களும், கணிதம், அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கே.சாந்தகுமார் உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு தொடர்பில்லாத கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்பதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பாடங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் நிர்ணயித்து தேர்வு நடத்தும் வகையில் அறிவிப்பாணையை திருத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு, தமிழ் பாடத்தில் கல்வித் தகுதியை பெற்றவர்தான் தமிழை பயிற்றுவிக்கிறார்; ஆங்கில பாடத்தில் கல்வித் தகுதியை பெற்றவர்தான் ஆங்கில பாடம் நடத்துகிறார்; ஆனால் இவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு எழுதிய நிரபந்திக்கப்படுகிறார்கள்; இது அவர்களுக்கு பாதாகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால், அடுத்த தேர்வில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அதற்கு ஏற்றபடி அறிவிப்பாணையை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version