மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்தர்பூர் தாலுகா ரஞ்சனி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சித்தநாத் கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
நேற்று மாலை 5 மணியளவில், மொத்தம் 15 பேர் கொண்ட குழு ஒரு பிக்-அப் வாகனத்தில் கோவில் தரிசனத்தை முடித்துக்கொண்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் அக்கம் பக்கத்து வீட்டினர். சித்தநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் திரும்பிய அவர்களின் பயணம் திடீரென பேரழிவில் முடிந்தது.
பந்தர்பூர்-மஸ்வத் நெடுஞ்சாலையில் தாண்டல்வாடி கிராமத்துக்கு அருகே வந்தபோது, வாகனத்தை ஓட்டியவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார். வாகனம் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் தலைகுப்புற பாய்ந்தது. வாகனம் நீருக்குள் மூழ்கியதால் உள்ளே இருந்தவர்கள் அலறிய சத்தம் சுற்றுவட்டாரத்தில் எதிரொலித்தது. உடனடியாக அந்த வழியே சென்ற பிற வாகன ஓட்டிகளும், தாண்டல்வாடி கிராம மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலர் துணிவுடன் கிணற்றுக்குள் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.
உள்ளூர் மக்களின் துரிதமான மீட்பு நடவடிக்கையால் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பந்தர்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், வாகனத்தில் இருந்த 6 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக்கு முக்கிய காரணம் கிணற்றைச் சுற்றி முறையான பாதுகாப்புச் சுவர் அல்லது தடுப்பு வேலி இல்லாததுதான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இந்தச் சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் இடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. கிராமப்புற சாலைகளில் உள்ள கிணறுகள், குழிகள் போன்றவற்றுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தத் துயரம் நினைவூட்டுகிறது.
