நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில், தேர் சக்கரத்தில் சிக்கிய இருவரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தின் 3-வது மிகப்பெரிய தேர் இதுவாகும். 450 ஆண்டுகள் பழமையான மரத்தேருக்குப் பதிலாக அமைக்கப்பட்ட புதிய திருத்தேர் கடந்த ஜனவரி மாதம் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில், இன்று வைகாசி விசாகத்தையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது.
தேரினை அமைச்சர் அருண்ராஜா உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் இந்த தேர் திருவிழாவில் பங்கேற்றனர்.

ஆரவாரத்துடன் நடைபெற்றுவரும் தேரோட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரத வீதியில் வலம் வந்த தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில், ஹர்ஷ்வர்தன் மற்றும் கல்லூரி மாணவர் சஷ்டிகன் ஆகியோர் சிக்கியுள்ளனர். இதில், அவர்கள் இருவரும் உடல் நசுங்கிய நிலையில், ஹர்ஷ்வர்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், சஷ்டிகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
