ஓடும் ரயிலில் தனக்கு ஆபாச சைகை காட்டிய நபரின் செயலை அந்த பெண் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட  நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ரூபாலி தீட்சித் என்ற என்ற பயனர், போல்பூர் சந்திப்பு மற்றும் டன்குனி இடையே இயங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு நபர், இவரை நோக்கித் தொடர்ந்து ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரூபாலி, உடனடியாகத் தனது மொபைல் போன் மூலம் அந்த நபரின் அநாகரிகச் செயலை வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், “இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்” என்று அவர் வேதனையுடன் கூறுவது கேட்கிறது.

https://x.com/GhumakkadLaali/status/2071614986259202085?

பின்னர் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ரூபாலி, “இன்று நான் விவேக் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தபோது, ரயிலின் கதவருகே நின்றிருந்த என்னை நோக்கி இந்த நபர் மிகவும் மோசமாக நடந்துகொண்டார்” என்று பதிவிட்டு, அந்த நபர் எஸ்.எம்.வி.டி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டிக்கு அருகில் நின்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

https://x.com/RailwaySeva/status/2071643238138872056?

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்திய ரயில்வே, ரூபாலி தீட்சித்தின் புகாரை ‘ரயில் மதத்’ குறைதீர்ப்பு தளத்தில் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த புகார் எண் ரூபாலியின் மொபைலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான போது அமைதியாக இருக்காமல், தைரியமாக வீடியோ எடுத்துப் புகார் அளித்த அந்தப் பெண்ணிற்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version