மணிப்பூரில் இனக்குழுக்களுக்கிடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி காங்டோபி மாவட்டத்தின் லெய்லோன் கிராமத்தைச் சேர்ந்த நாகா சமூகத்தைச் சார்ந்த ஏழு இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய குக்கி அமைப்பினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அமைப்புகளும் இணைந்து பல்வேறு பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சுமார் 29 நாட்கள் நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, காங்பேய் கிராமம் அருகிலுள்ள மலைக்காட்டுப் பகுதியில் அந்த ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும், கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாகா சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது.
இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து நாகா அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதன் விளைவாக சுமார் 30 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காமஜோங் மாவட்டத்தில் குக்கி சமூகத்தினர் வசிக்கும் குல்டா கிராமத்தில் நடந்த மோதலின் போது இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. சேனாபதி மாவட்டத்தின் கரோங் பகுதியில் சாலையில் சென்ற சரக்கு வாகனமொன்றும் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் நாகா மக்கள் முன்னணி அமைப்பின் அலுவலகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. தமேன்க்ளோங் மாவட்டத்தின் தாமேய் பகுதியிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு தொடங்கிய இனக்குழு மோதல்கள் மாநிலத்தின் சமூக ஒற்றுமையை கடுமையாக பாதித்துள்ளன. அப்போது சுமார் 250 பேர் உயிரிழந்த நிலையில், அதன் பின்னரும் வன்முறை மற்றும் இடம்பெயர்வு காரணமாக மொத்த உயிரிழப்புகள் 700-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள். மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த நெருக்கடியால், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குக் கூட பலர் போராடும் சூழல் நிலவுகிறது. சமீபத்திய சம்பவங்கள் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.
