பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு அதிக அளவில் உறிஞ்சப்பட்டு திடீரென வெடித்ததே இந்த கோர விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்தபோது உள்ளே வேலை செய்துகொண்டிருந்தவர்களில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 24-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாலும், நச்சு வாயுக்கள் சூழ்ந்துள்ளதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாகாண அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version