கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 19-ஆம் தேதி, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, மேகதாது விவகாரத்தை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டது.

இந்தத் திருத்தத்திற்கு அதிமுக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஜூன் 18-ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலில் இந்தத் திருத்தம் இடம்பெறவில்லை என்றும், எந்த விவாதமும் இல்லாமல் அது நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருத்தம் ஒருமனதாக நிறைவேறாத நிலையிலும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version