எந்த காலகட்டத்திலும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் எனவும்,  முதலமைச்சர் இதனை சட்டசரீதியாக சந்திப்பார் என எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சரின் தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒவ்வொரு துறையின் சார்பாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அதற்கான புள்ளிவிவரங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இப்பணிகளை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

ஈஷா யோகா மூலம் தமிழ்நாட்டில் இதுவரையிலும் 13 கோடியே 40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 1கோடியே 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக இப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நமக்கு மிக முக்கியத் தேவைகளான குடிநீர், பாசன வசதி மற்றும் கால்நடைகளுக்கான நீர் ஆகியவை தடையின்றி கிடைக்கப் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

1972 முதல் இன்று வரை காவிரி நீருக்காகவும், மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என்பதற்காகவும் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

முதலமைச்சர் கனவு காவிரியில் வருகின்ற நீரை ஒரு சொட்டு தண்ணீரை கூட கர்நாடக அரசு தடுக்கக்கூடாது. அனைத்தும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதில் எந்த குறைபாடும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

மேகதாது அணையை தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதை கட்டக்கூடாது என அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கூறி இருக்கின்றார் அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து வருகிறார்

பவானிசாகர், பி.ஏ.பி., ஆழியாறு, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து அணைகளும், நீர்நிலைகளும் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு கவனமாக உள்ளது.

சாக்கடை நீர் மற்றும் கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் கலப்பதைத் தடுத்து, சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே செல்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் 15 ரூபாய் கொடுத்துத் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலையை மாற்றி, எங்கு குழாயைத் திறந்தாலும் சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வதே இந்த அரசின் லட்சியமாகும். இத்திட்டத்தை அரசு நிறைவேற்றி வருகிறது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் தற்போது 18 சதவீதம் பேருக்குப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், விவசாய சங்கங்களின் ஒத்துழைப்போடு, நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் கழிவுநீரை வெளியேற்றி வந்த சாயப்பட்டறைகளின் இயக்கம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாயப்பட்டறைகள் அமைப்பதற்கோ அல்லது கழிவுகளை வெளியேற்றுவதற்கோ அரசு அனுமதி அளிக்காது. மக்கள் விழிப்புணர்வுடன் மரங்களை நடுவதன் மூலம் ஆக்ஸிஜன் கூடுதலாகக் கிடைத்து, ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாகும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த அரசு விளங்கி வருகிறது.

பிரதமரிடம், மேகதாது அணை குறித்து முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கின்றார் ஆனால் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது வெளியில் சொல்லக்கூடாது. உச்ச நீதிமன்றம் தெளிவாக இருக்கிறது நாங்களும் தெளிவாக இருக்கின்றோம் எந்த காலகட்டத்திலும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம். சட்டரீதியாக தடுப்போம் எனக் கூறினார்.

இது தொடர்பாக கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதான என்னும் கேள்வியை அமைச்சர் தவிர்த்து விட்டு எழுந்து சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version