சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய்யிடம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், சினிமா துறையின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்பதால், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, 10 அம்சங்கள் கொண்ட மெகா மனுவை சமர்ப்பித்தனர்.

இந்த சந்திப்பில் முக்கிய கோரிக்கையாக, திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ₹250 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர். தற்போது மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட உயர்தர திரையரங்குகளில் நிலவும் டிக்கெட் விலை வரம்பை மாற்றி, அரசு அதிகாரப்பூர்வமாக ₹250 வரை அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். OTT தளங்களின் தீவிர வளர்ச்சி, கடுமையான மின் கட்டண உயர்வு, சொத்து வரி அதிகரிப்பு, தியேட்டர் பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அழுத்தங்கள் காரணமாக, திரையரங்குகளை நஷ்டமின்றி நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக உரிமையாளர்கள் முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் விதிக்கப்படும் ‘உள்ளூர் பொழுதுபோக்கு வரி’ (Local Body Entertainment Tax)யை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும். திரையரங்கு உரிமம் (C-Form) புதுப்பித்தலை எளிதாக்கி, நெகோஷியேஷன் இல்லாத ஒற்றைச் சாளர முறையில் வழங்க வேண்டும். மின்சாரக் கட்டணத்தை வணிக நிலையிலிருந்து MSME (குறு, சிறு, நடுத்தர தொழில்) பிரிவுக்குக் கொண்டு வந்து குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

சினிமா பின்னணியில் இருந்து நேரடியாக அரசியல் உச்சத்துக்கு வந்த முதலமைச்சர் விஜய், தங்களது நீண்டகாலப் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு விரைவில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையை தியேட்டர் அதிபர்கள் வெளிப்படுத்தினர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், “எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், வரும் காலங்களில் தமிழகத்தில் சினிமா டிக்கெட் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. திரையரங்கு உரிமையாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் அதே வேளையில், பொதுமக்களின் சினிமா பார்க்கும் உரிமையும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சமநிலையான முடிவை முதலமைச்சர் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version