மத்தியப் பிரதேசத்தில் உள்ள மவுகஞ்ச் மாவட்டம் மகானியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதியின் தற்கொலை, நீட் யூஜி 2026 தேர்வுடன் தொடர்புடைய மாணவர்களின் மன உளைச்சலை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. மே 3-ம் தேதி நடைபெற்ற தேர்வில் சுமார் 22.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில், வினாத்தாள் கசிவு புகாரை அடுத்து மே 12-ம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இந்த முடிவை அறிவித்ததுடன், வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்துள்ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நிச்சயமற்ற தன்மை மாணவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகான்ஷாவின் குடும்பம் விவசாயத்தை நம்பியிருந்தது. அவரது தந்தை கிருஷ்ணா குமார் சதுர்வேதி சிறு விவசாயியாக இருந்து, மகளின் டாக்டர் கனவை நனவாக்க கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றார். நாக்பூரில் ஒரு பயிற்சி மைய விடுதியில் சமையல்காரராகப் பணியாற்றி மகளின் படிப்புச் செலவுக்கு உதவினார். முதல் முயற்சியிலேயே 650க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெறுவதாக நம்பிய அகான்ஷா, தேர்வுக்குப் பின் வீட்டுக்கு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், வினாத்தாள் கசிவு செய்தியும் தேர்வு ரத்து அறிவிப்பும் அவரைப் பெரிதும் பாதித்தன. உணவு உட்கொள்ளாமல் தனிமையில் இருந்த அகான்ஷா, மே 20-ம் தேதி நாக்பூர் பயிற்சி மைய விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தந்தைக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில், “அம்மா அப்பா, நீங்கள் என்னை டாக்டர் ஆக்க நம்பினீர்கள். முதல் முறை நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று நினைத்தேன். இப்போது மறுதேர்வுக்கு தைரியம் இல்லை. உத்தரவாதம் இல்லை” என வருத்தம் தெரிவித்திருந்தார். அவரது உடல் சொந்த ஊரான மகானியாவில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “அகான்ஷா டாக்டராகி நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினாள். ஒரு தந்தையின் தியாகம் வீணாக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, நிச்சயமற்ற நிலை ஆகியவை இதற்குக் காரணம். இது தற்கொலை அல்ல, ஊழல் நிறைந்த கல்வி அமைப்பின் வெளிப்பாடு” எனக் குற்றம்சாட்டினார். கடந்த 12 ஆண்டுகளாக கல்வி முறையைச் சீரழித்ததாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் பதவியில் இருப்பதாகவும் விமர்சித்த அவர், இளம் தலைமுறையினர் விலை கொடுப்பதாக எச்சரித்தார்.
நீட் தேர்வு அமைப்பில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு, தேர்வு அழுத்தம் ஆகியவை மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன. பல மாணவர்கள் தீவிர மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசு உடனடியாக ஆலோசனை மையங்கள் அமைத்து, தேர்வு நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம், போட்டித் தேர்வுகளில் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என்பதை நினைவூட்டுகிறது.
