நீலகிரி மாவட்டத்தில் இந்திய புவியியல் துறை கடந்த ஒரு வருடகாலமாக செய்த ஆய்விற்கு பிறகு தற்போது 160 அபாயகரமான பகுதிகளாக குறைந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக ஓயாத மழை பெய்து வருகிறது. இந்த மழைப் பொழிவு மலைப்பகுதிகளின் இயற்கை அமைப்புக்கு ஏற்ப அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இது குறித்து வெளியிட்ட பேட்டியில், “முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற பருவமழை ஆய்வுக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் பாதிப்புக்குரிய மாவட்டங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது. அதன்படி, அனைத்துத் துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

மாவட்டத்தில் முன்பு 283 இடங்கள் அபாயகரமானவையாகக் கண்டறியப்பட்டிருந்தன. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (GSI) விரிவான ஆய்வுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை தற்போது 160 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அபாயப் பகுதிகளில் மண்சரிவு, பாதை உடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர். 20,000 மணல் மூட்டைகள் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 20 ஜேசிபி இயந்திரங்கள் (JCB) மழைப் பாதிப்புகளை உடனடியாகச் சரிசெய்ய தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 29 மண்டல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தங்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்கும். மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை, மின்வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பணியாற்றுவார்கள். அனைத்து தாலுக்கா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களும் பொதுமக்களின் புகார்களைப் பெற தயார் நிலையில் உள்ளன. மழைநீர் வடிகால்வாய்கள், கல்வெட்டுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளும் முன்னதாகவே சீரமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, “பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்களது பாதுகாப்பை முதன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மழை தொடர்பான எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக 1077 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகள் உடனடியாகச் செயல்படுவார்கள்” என்று உறுதியளித்தார். நீலகிரியின் மலைப்பாதைகள், சுற்றுலா இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. மாவட்ட நிர்வாகம் மழையின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version