தமிழக அரசியல் களத்தில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிமுக-விற்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான ‘எக்ஸ்’ போர் வெடித்துள்ளது. “விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, தவெக ஐடி விங் விமர்சனம் செய்ய, அதற்கு அதிமுக ஐடி விங் கொடுத்துள்ள பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “தீர்ந்துபோன சக்தி” என மறைமுகமாகக் குறிப்பிட்டு தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டது. அந்த பதிவில், “திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ? வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
https://x.com/TVKHQITWingOffl/status/2063519201709723857?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?. கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.? குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை.
தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது. பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்? இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி என்று பதிவிட்டிருந்தது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி, “இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு” எனத் தெரிவித்து கடுமையாக விமர்சித்துள்ளது.
https://x.com/AIADMKITWINGOFL/status/2063556459431153748?
”அட ஆச்சரியக்குறிகளே! புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர். தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் அதிமுகவை தோற்றுவித்தவர். அம்மா, கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா. வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம். உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது? அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே? 8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில், பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில், தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில், உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் விஜய் ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு? ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்? நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன? “கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா? கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது? அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம். விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க என்று பதிலடி கொடுத்துள்ளது. இரு கட்சிகளின் இந்த வார்த்தைப்போர் தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
