கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.25 கோடி பேர் திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ததன் மூலம், மத்திய அரசு கூடுதலாக ரூ.9,493.66 கோடி வரி வசூலித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தவறான வரிச்சலுகைகள் மற்றும் போலியான கழிவுத் தொகை கோரிக்கைகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.
தரவு பகுப்பாய்வு , சரிபார்ப்பு நடவடிக்கைகள், சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், தவறான வரிச்சலுகை பெற உதவியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் மட்டும் 1.25 கோடி Updated ITR-கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.9,493.66 கோடி கூடுதல் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) செயல்படுத்திய NUDGE (Non-intrusive Usage of Data to Guide and Enable) திட்டத்தின் மூலம் மொத்த வருவாய் தாக்கம் ரூ.12,121.91 கோடியாக இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரித்துறை தனது உள்துறை தரவு பகுப்பாய்வு அமைப்பின் மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக வரி செலுத்துவோரை திருத்தப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்ய ஊக்குவித்து வருகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், TDS, TCS, GST, உயர்மதிப்பு பரிவர்த்தனைகள், சொத்து வாங்கல்-விற்பனை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, தவறான தகவல்கள் அல்லது மறைக்கப்பட்ட வருமானம் தொடர்பான அபாய மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
2024 இறுதியில் தொடங்கப்பட்ட NUDGE திட்டம் தற்போது SAKSHAM NUDGE என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தரவு சேகரிப்பு, ஆய்வு, அபாய மதிப்பீடு, விழிப்புணர்வு, வழிகாட்டுதல், திருத்தப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்ய அனுமதி மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பல கட்டங்களின் மூலம் வரி இணக்கத்தை (Tax Compliance) அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்காக ஜூலை 31-ஆம் தேதி வரை 5.9 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
