நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகி ருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நடப்பாண்டில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், 113 பத்மஸ்ரீ உள்ளிட்ட 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள விருதுகள், பின்னர் நடைபெறும் மற்றொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உட்பட மொத்தம் 66 பேருக்கு உயரிய பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிக்கிறார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மற்றும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆளுமைகளுக்கு இன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில், பத்ம விபூஷண் விருது 2 பேருக்கும், பத்ம பூஷண் விருது 6 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 58 பேருக்கும் என மொத்தம் 66 பேருக்கு வழங்கப்படவுள்ளன. இதில் பத்ம விபூஷண் விருது மறைந்த இந்தி நடிகர் தர்மேந்திரா, முன்னாள் கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் 7 பேருக்கு விருது: தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 7 பேர் இந்த விழாவில் விருதுகளைப் பெறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அம்ரித்ராஜ் உள்ளிட்ட 13 பேர் பத்ம பூஷண் விருதை பெறுகின்றனர். இவர்களைத் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து ஆளுமைகளுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.
பத்மஸ்ரீ விருதுகள் நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, டாக்டர் எச்.வி.ஹண்டே, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உள்ளிட்ட 113 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
